வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகே சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளக்கோவில் வழியாக நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் இலகுரக, கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. வெள்ளக்கோவிலில் இருந்து காங்கயம் செல்லும் வழியில் ஓலப்பாளையம் முன்பாக அத்தாம்பாளையம் பிரிவு அருகே 10 அடி அகலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த சாலை நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாததால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன. மேலும் இரவு சாலை சரிவர தெரியாததாலும், முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென நிறுத்தப்படுவதாலும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படுகிறது.
இச் சாலையில் இருசக்கர வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதில் அண்மையில் ஒரு இளம் தம்பதி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இடம் ஏற்கனவே விபத்துப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.