வெள்ளக்கோவில்: முத்தூர் அருகே உயிருக்குப் போராடிய புள்ளிமானை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் மீட்டுக் காப்பாற்றினர்.
முத்தூர் - நத்தக்காடையூர் சாலை சேரம்பாளையம் மயானம் அருகில் சாலையோரப் புதரில் கழுத்தில் காயத்துடன் புள்ளிமான் கிடப்பதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் புள்ளிமானுக்குத் தண்ணீர் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த முத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரி வசம் மானை ஒப்படைத்தனர். கிராம உதவியாளர்கள் சந்திரகுமார், சுரேஷ் மூலம் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, அதற்கு தீவனம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மான் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அங்கு வந்த காங்கயம் வனச் சரக அலுவலர் சுரேஷ் வசம் மான் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:
புள்ளிமானுக்கு சுமார் இரண்டு வயது இருக்கும். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப் பகுதியில் இருந்து இங்கு வந்திருக்கலாம். விவசாய நிலங்களின் கம்பிவேலியில் நுழைந்தபோது மானுக்குக் காயம் ஏற்பட்டுள்ள அடையாளம் தெரிகிறது. மானை பொதுமக்கள் மீட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊதியூர் வனப் பகுதியில் புள்ளிமான் விடுவிக்கப்படும் என்றார்.