திருமுருகன்பூண்டி காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் கமிட்டி, தியாகி குமரன் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் 3ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார். தியாகி குமரன் நற்பணி மன்ற செயலாளர் யோகநாதன், தியாகி குமரன் நற்பணி மன்ற நிர்வாகி ராமு (எ) ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு நெசவாளர் காலனியில் உள்ள அனைத்து வீடுகள் முன்பும் பெண்கள் வண்ணக் கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கு ஓட்டப் பந்தயம், சாக்குப் போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, ஸ்கிப்பிங், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர், லெமன் ஸ்பூன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல், உறி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தியாகி குமரன் நற்பணி மன்ற தலைவர் சங்கர், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, வேல்முருகன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.