திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு திருப்பூரில் செவ்வாய்க்கிழமை கோயில் திறக்கப்பட்டது.
திருவள்ளுவரின் 2050 ஆவது அவதார நாள், மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு, திருப்பூர் மாநகராட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவு, திருப்பூர் மக்கள் மாமன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆகியவற்றின் நினைவாக டைமண்ட் திரையரங்கம் அருகே உள்ள எழுத்தறிவாலயம் பொது நூலகத்தில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டு வந்தது.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொங்கல் பண்டிகையான செவ்வாய்க்கிழமை கோயில் திறக்கப்பட்டது. தவத்திரு பூண்டி சுந்தரராச அடிகளார் கோயிலைத் திறந்து வைத்தார்.
இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் நான்கரை அடி உயர சிலையை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மக்கள் மாமன்றத்தின் தலைவர் சுப்பிரமணியம், சிறப்பு ஆலோசகர் ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.