காங்கயத்தில் உள்ள காரல் மார்க்ஸ் நூலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு நிலையத்துக்கு எதிரே உள்ள இந்த நூலகத்தில் வாசகர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், தைத் திருநாள் குறித்தும் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் காங்கயம் தமிழ் சங்கத்தின் தலைவர் மு.தணிகாசலம், காரல் மார்க்ஸ் நூலகத்தின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், திருமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
இதில், தமிழ்த் தேசிய மகளிர் மன்ற செயலாளர் தமிழ்க்கொடி, நூலகப் பொறுப்பாளர் தாமரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர்.