சேவூர் வாரச் சந்தையில் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பாலித்தீன் (பிளாஸ்டிக்) பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சியில், திங்கள்கிழமை வாரச் சந்தை கூடுவது வழக்கம். இதில் உள்புறம் 800 கடைகளும், வெளிப்புறப் பகுதியில் கோபி சாலையில் 200 கடைகளுக்கு இயங்கி வருகிறது.
இங்கு காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தச் சந்தையில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். இந்நிலையில் வாரச் சந்தையில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்டுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இதையடுத்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் வாரச் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வராச் சந்தை வியாபாரிகள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளில் பாலித்தீன் பைகளில் பருப்பு, உளுந்து, கடுகு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது. அடுத்த முறை பயன்படுத்தினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.