திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 173 மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ. 41 லட்சம் மானியத்தை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் சனிக்கிழமை வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் விழா குமரானந்தபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், ஒன்றியப் பகுதிகளில் 21 பேர், நகரப் பகுதியில் 152 பேர் என மொத்தம் 173 மகளிருக்கு ரூ. 41 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
இதில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், பகுதி செயலாளர்கள் கருணாகரன், கணேஷ், பட்டுலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.