பல்லடம் அருகேயுள்ள மூகாம்பிகை நகரில் தண்ணீர் நுரையில் விநாயகர் உருவம் தெரிந்ததால் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மூகாம்பிகை நகர் நெசவாளர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டி சிலையை பிரதிஷ்டை செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கோயிலில் பிரதிஷ்டை செய்ய இரண்டரை அடி உயர விநாயகர் கற்சிலை செதுக்கப்பட்டு அதை சுத்தம் செய்ய கோயில் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்திருந்தனர். தண்ணீர் தொட்டியில் இருந்து வெள்ளை நிறத்தில் நுரை கிளம்பி தொட்டியின் மேல் பகுதிக்கு வந்து விநாயகர் உருவம் போல் வெள்ளிக்கிழமை காட்சி அளித்தது. இது பற்றிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து தண்ணீர் நுரை விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.