திருப்பூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தனியார் துறை சார்பில், திருப்பூரில் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 14ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தளம் எண் 4, அறை எண் 439, திருப்பூர் - 641 604 என்ற முகவரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் தனியார்துறையில் வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு தேவையானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை தேடுபவர்கள், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதையும் சரிசெய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகியவற்றையும் செய்து கொள்ளலாம்.