உணவுப் பொருள்கள் பாதுகாப்பு குறித்து தாராபுரத்தில் பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலப்படத் தடுப்புப் பிரிவு மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு துறை சார்பில், தாராபுரம் புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், உணவுப் பொருள்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருள்களைக் கண்டறிவது குறித்து செயல் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் உட்கொள்ளும் வண்ணம் பூசப்பட்ட இனிப்புப் பொருள்களைத் தவிர்ப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கலப்படப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம், கலப்படம் பற்றிய தகவல் தெரியவந்தால் அதனை உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம். நோயற்ற வாழ்வுக்கு ஆரோக்கிய உணவை பயன்படுத்துவோம்
என்ற உறுதிமொழிகளை மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக கலப்படத் தடுப்பு பற்றிய பேச்சுபோட்டிகள், ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பி.விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், லியோ, ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.