மகளிர் சுயஉதவிக் குழுவினரே ரேஷன் கடையை நடத்தக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூர் கங்கா நகர் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவினரே பொது விநியோகக் கடையை தொடர்ந்து நடத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கங்காநகர் பொதுமக்கள் சார்பில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாநகரம், 30ஆவது வட்டம் போயம்பாளையம் மேற்கு கங்கா நகரில் உள்ள கஸ்தூரி பாய் மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் 15 ஆண்டுகளாக பொது விநியோகக் கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த பொது விநியோகக் கடை சரிவர நடப்பதில்லை என்று பொய்யான தகவல்களைக் கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே, மகளிர் குழுவினரே தொடர்ந்து சிறப்பான முறையில் பொது விநியோகக் கடையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.