தாராபுரத்தில் சாலைப்பணியின்போது மின் கம்பம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராபுரத்தில் ஒட்டன்சத்திரம் -தாராபுரம், அவிநாசிபாளையம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றும் பணியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர்களான கோபாலகிருஷ்ணன் (24), இசக்கிமுத்து (27), ஜெயபெருமாள் (25) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரீட் மின் கம்பம் சரிந்து விழுந்தது.
இதில், படுகாயமடைந்த மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இசக்கிமுத்து, ஜெயபெருமாள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.