முத்தூர் அருகே சாலையோர மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதி உயிரிழந்தார்.
முத்தூர், ராசாத்தாவலசைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சுகுமார் (28). இவர் திருப்பூரில் உள்ள தனியார் மருந்துப் பொருள்கள் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.
இவர் தனது மனைவி சித்ரா (25), மகன் சஸ்விந்த் (2) ஆகியோருடன் முத்தூர் ரங்கப்பையன்காடு கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் காங்கயத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சுகுமார் வந்து கொண்டிருந்த போது ரங்கப்பையன்காடு அருகே திடீரென சாலையோர மின்கம்பத்தில் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில் போலீஸார் அவரது உடலை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.