அவிநாசி அருகே பழங்கரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பனியன் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீராம்பாளையம் கருக்கன்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் கோபால்(30). பனியன் தொழிலாளி.
இவர் அவிநாசியில் இருந்து ஈட்டிவீராம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார். அவிநாசி ஈரோடு சாலை பழங்கரை அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த கோபால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.