திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,028 வாக்குச் சாவடி மையங்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உரிய அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட படியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, களிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, காங்கயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இதில், வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, காங்கயம் வட்டாட்சியர் விவேகானந்தன், காங்கயம் நகராட்சி ஆணையாளர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.