மக்களவைத் தேர்தல் பணியில் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தல் தொடர்புடைய பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பதை, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீது தேர்தல் விதிமுறை மீறல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கையும், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இதனை தேர்தல் தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.