அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலங்களை சமூக ஆர்வலர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை அடக்கம் செய்தனர்.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலக அருகே பேருந்து நிறுத்தம் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அந்த முதியவரை மீட்ட நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவருக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்க சமூக ஆர்வலர்கள் முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில், புதன்கிழமை காலை முதியவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தின் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் புதன்கிழமை செய்தனர்.