உடுமலை நகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் துவக்கம்

உடுமலை நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் புதன்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. 

உடுமலை நகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் புதன்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. 
உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பொதுமக்களிடம் இருந்து மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகள் எனத் தனித் தனியாக சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு, சேகரிக்கப்படும் குப்பைகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி உரக் கிடங்குக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. 
இந்நிலையில், இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் நகராட்சி உரக் கிடங்கில் உள்ள பழைய குப்பைகளை பயோ-மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க 3 பசுமை உரக்குடில்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ராஜேந்திரா சாலையில் அமைக்கப்பட்டு வந்த பசுமை உரக்குடில் பணிகள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் துவக்கி வைத்தார். இந்த உரக்குடில் மூலமாக மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 
மேலும், மற்ற உரக்குடில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் எம்.சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், ஏ.செல்வகுமார், எஸ்.ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com