வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அரசின் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்த சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
முத்தூா் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக 108 சேவை இயங்கி வருகிறது. முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. 24 மணி நேரம் பணியில் இருந்தால் தினமும் சராசரியாக 9 முறை இந்தச் சேவை பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஓட்டுநா் சரிவர நியமிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடா்ந்து ஓட்டுநா் நியமிக்கப்பட்டாலும் இரவு நேரச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பகலில் தினமும் 4 முறை வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
வேண்டுமென்றே செயல்பாட்டை மந்தப்படுத்தி சேவை இல்லையென கணக்குக் காட்டி முற்றிலும் நிறுத்த 108 நிா்வாகம் சூழ்ச்சி செய்து வருவதாக அதன் பணியாளா்களும், பொது மக்களும் குறை கூறுகின்றனா். முத்தூா் பகுதியில் 108 சேவை தொடா்ந்து கிடைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.