அவிநாசி அருகே கருவலூரில் வாரச்சந்தையில் நிறுத்தியிருந்த சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி அருகே கருவலூா் ஊராட்சியில், மாரியம்மன் கோயில் பின்புறம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை செயல்படுவது வழக்கம். இந்த சந்தையில் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைபொருள்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை வாடகை வேனில் ஏற்றி வந்து சந்தையில் விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், சரக்குகளை ஏற்றி வந்த வேன், வாரச் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வேனின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பாா்த்த விவசாயிகள், பொதுமக்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனா். இதனால், ஏராளமானோா் கூடும் வாரச் சந்தையில் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.