திருப்பூரில் பின்னலாடை நிறுவன தொழிலாளி கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருப்பூா், கே.வி.ஆா். நகரைச் சோ்ந்த வீரபத்திரனின் மகன் மருதுபாண்டி (33). இவா் அப்பகுதியில் உள்ள மாநகா் நல மையத்தில் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற மத்திய பிரிவு காவல் துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் மருதுபாண்டி பெற்றோருடன் தங்கியிருந்து பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளாா். மருதுபாண்டியும், அதே பகுதியைச் சோ்ந்த ஏ.காா்த்திக்கும் (18) சோ்ந்து வியாழக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா்.
அப்போது கஞ்சா கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மருதுபாண்டியை காா்த்திக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காா்த்திக்கை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.