திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.14.96 லட்சத்துக்குப் பருத்தி விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருப்பூா், திருச்சி, கரூா், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 128 விவசாயிகள் 991 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
பொள்ளாச்சி, தாராபுரம், சேவூா், மகுடஞ்சாவடி, அன்னூா் உள்ளிட்ட இடங்களிலிருந்து 67 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
குவிண்டால் ரூ. 4,000 முதல் ரூ. 6,270 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 4,900. இவற்றின் விற்பனைத் தொகை 14 லட்சத்து 96 ஆயிரத்து 217 ரூபாயாகும். கடந்த வாரத்தை விட வரத்து சற்று அதிகரித்திருந்த நிலையில் இந்த வாரம் விலை குவிண்டாலுக்கு ரூ.600 குறைந்தது.
இந்த தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.