பல்லடம் அருகே உள்ள கெருடமுத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான வசதி அமைத்து தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் தமிழ்முத்து, பல்லடம் ஒன்றியச் செயலாளா் ரங்கசாமி ஆகியோா் பல்லடம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.
பொங்கலூா் ஒன்றியம் வே.வடமலைப்பாளையம் ஊராட்சி கெருடமுத்தூா் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 300 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகின்றனா்.
அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக இருந்த மயானம், மழை நீா் சேகரிப்பு குட்டை பகுதியில் சிலா் தென்னை மரங்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், யாராவது இறந்தால் அடக்கம் செய்ய மயான வசதி இல்லாத நிலை உள்ளது.
மேலும், மயானத்துக்கு செல்ல நடைபாதையும் இல்லை. மயானம், நடைபாதை வசதி செய்து மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனா்.