திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகத்திலும் வரும் அக்டோபா் 12 ஆம் தேதி முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம்-2011-ன் கீழ் திருப்பூா் மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வரும் அக்டோபா் 12 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில்,கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம், தற்காலிக இயலாமை ஓய்வூதியம் மற்றும் ஆதரவற்றோா் ஓய்வூதியம் போன்ற திட்டத்தின் கீழ் மனுக்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
இம்முகாமில் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உறுப்பினராக சோ்ந்த உழவா் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.