உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு செவ்வாய்க்கிழமை கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருப்பூர் வடக்கு நிலைய அலுவலர் பாஸ்கரன் முன்னிலையில் 22 வீரர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் படகு இயக்குதல் பயிற்சிகளும், அங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
மேலும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரிலிருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், மீட்புப் பணிகளின்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் பயிற்சியாளர் மைக்கேல் பயிற்சி அளித்தார்.