பாசனத்துக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறந்துவிடக் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்துக்காக

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில்  சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் இந்த அணை  நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது.  
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரள மாநிலம், மூணாறு, மறையூர், காந்தலூர், கோவில்கடவு பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தது. இதை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 83 அடியை எட்டியது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிர்களைக் காப்பாற்ற 15 நாள்களுக்கு உயிர்த் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
மேலும் அமராவதி ஆற்றிலும் தினமும் 2 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 8 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 84 அடியை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி பாசனப் பகுதிகளில் மக்காச்சோளம் நடுவதற்கு ஏதுவாக உள்ளது. மேலும், நெல் நடவுகளைத் துவங்கவும் தயாராக இருக்கிறோம். இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ளதால் புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மகிழ்ச்சி அடைவோம் என்றனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறையினர் கூறியதாவது:
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது நீர்மட்டம் 84 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அநேகமாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு மேல்  தண்ணீர் திறந்து விடவாய்ப்பு உள்ளது என்றனர்.
அணை நிலவரம்
90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 82.98 அடியாக இருந்தது. அணைக்கு 629 கன அடி நீர்வரத்தாக உள்ளது. 4047 மில்லியன் கன அடி கொண்ட அணையில் 3426.58 கன அடி நீர் இருப்பாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com