பிஏபி பாசனத் திட்டத்தில் உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பிஏபி பாசனத் திட்டத்தில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாவிபாளையம் விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஏபி பாசனத் திட்டம் மூலம் பொள்ளாச்சி, உடுமலை, சூலூர், பல்லடம், காங்கயம் தாலுக்காக்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பாசனமும், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 135 நாள்களுக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். பிறகு காலப்போக்கில் 135 நாள்கள் என்பது படிப்படியாக குறைந்துவிட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டில் இன்னும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஏற்கெனவே மண்டலத்துக்கு ஒருமுறை என்றளவில் கால இடைவெளிவிட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதையும் முறையாக திறக்காததால் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தென் மேற்கு பருவ மழையால் பிஏபி பாசனத் திட்ட அணைகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. பிஏபி பாசனத் திட்ட தண்ணீர் கிடைத்தால் மட்டுமே வறட்சியின் பிடியிலிருந்து மேற் குறிப்பிட்ட பாசனப் பகுதிகளை காப்பாற்ற முடியும். எனவே விவசாயிகளின் நலன் கருதி பிஏபி பாசனத் திட்டத்தில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.