திருமுருகன்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அன்பு இல்ல நிறுவனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிநாசி, திருமுருகன்பூண்டி அருகே பொங்குபாளையம் பகுதியில், திருப்பூர் அன்பு இல்லத்தின் கீழ் செயல்பட்டு வரும் விவேகானந்த குருகுலம் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி விடுதியில் வசதியற்ற 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அன்பு இல்லத்தின் நிறுவனர், மாணவர்களிடம் தகாத முறையில் நடப்பதாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரெனச் சென்ற அலுவலர்கள் அங்கு படிக்கும் குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராகுல் அளித்த புகாரின்பேரில் ராஜசேகர் மீது பெருமாநல்லூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.