அடிப்படை வசதிகளை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிறுவனர் கார்மேகம் தலைமை வகித்தார். மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததாலும், சாக்கடைக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கிக் கிடப்பதாலும் சுகாதாரக் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சாலை, சாக்கடை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.