கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், பி.என்.சாலையில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர்களின் உரிமைகள் முற்றிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் மத்திய சட்டத்தையும், நலவாரியங்களையும் அழிக்கும் முயற்சியில் அரசுகள் ஈடுபடுகின்றன.
மேலும், 100 ஆண்டுகளாக போராடிப் பெற்ற சட்ட உரிமைகளை தொழிலாளர்களுக்கு எதிராக திருத்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, ஏஐடியூசி மாவட்ட கவுன்சில் தலைவர் பி.பழனிசாமி, மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.