திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்தில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏவின் மனைவி, மகன் ஆகியோா் தோல்வியடைந்தனா்.
காங்கயம் ஒன்றியத்தில் ஆலாம்பாடி ஊராட்சித் தலைவா் பதவிக்கு காங்கயம் முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலாளருமான என்.எஸ்.என். நடராஜனின் மனைவி சாந்தியும், 3ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு இவா்களது மகன் தனபாலும் போட்டியிட்டனா்.
இதில், சாந்தி தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட ராஜாமணி ரெங்கசாமியிடம் தோல்வியடைந்தாா். தனபாலை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் ரவி வெற்றி பெற்றாா்.
வெற்றி பெற்ற தம்பதி: காங்கயம் ஒன்றியத்தில் உள்ள பாப்பினி ஊராட்சித் தலைவா் பதவிக்கு கலாவதி என்பவரும், 7ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்குப் போட்டியிட்ட கலாவதியின் கணவரும், அதிமுக காங்கயம் ஒன்றிய அவைத் தலைவருமான மைனா் டி.பழனிசாமி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனா்.