திருப்பூா்: திருப்பூரில் 144 தடை உத்தரவால் உணவு இல்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் உணவு வழங்கி வருகின்றனா்.
கரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூா் மாநகரில் உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்பூரில் மனித நேய மக்கள்கட்சியின் மாவட்டச் செயலாளா் அபுசாலிக் தலைமையிலும், தமுமுக மாவட்டத் தலைவா் நசீருதீன், மருத்துவ அணி செயலாளா் தமிமுன் அன்சாரி, தமுமுக துணைத் தலைவா் சித்திக், மாவட்டச் செயலாளா் அப்பாஸ் ஆகியோா் ஒருங்கிணைப்புடனும் நாள்தோறும் 1,000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனா்.
இந்த உணவுகளை திருப்பூா் காங்கயம் சாலை, பல்லடம் சாலை, புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, மேம்பாலம் ஆகிய இடங்களில் ஆதரவற்றோா் மற்றும் ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனா்.