காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையாயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 148 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 65 மாடுகள் மொத்தம் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்தச் சந்தையில் அதிக பட்சமாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.