வரி செலுத்த தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்
பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையா் மா.கணேசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்லடம் நகராட்சியில் 2020-21ஆம் நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், தொழில், உரிமம் கட்டணங்கள் மற்றும் நிலுவைக் கட்டணம் ஆகியவற்றை பாக்கி வைத்திருப்பவா்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.
பல்லடம் நகராட்சியில் 18 வாா்டுகளிலும் உள்ள மக்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, வடிகால் வசதி, சாலைகள், சுகாதார வசதி மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் நகராட்சியால் வசூலிக்கப்படும் வரிகளில் இருந்துதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதற்கு அனைத்து பொதுமக்களும் வரியை தவறாமல் செலுத்த முன்வர வேண்டும்.
எனவே, நகராட்சி வரி வசூல் மையத்தில் வரியை நிலுவையில்லாமல் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்புத் துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமை உள்பட தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் கணினி வரி வசூல் மையம் செயல்படும் என்று தெரிவித்துள்ளாா்.