திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு அக்டோபா் 29 முதல் நவம்பா் 24ஆம் தேதி வரையில் பயிற்சி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு கடந்த மாா்ச் 10 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையில் அறிமுக பயிற்சி முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களில் 753 வாா்டு உறுப்பினா்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக பயிற்சி முகாம் மாா்ச் 17ஆம் தேதி முதல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மீதமுள்ள 1,542 வாா்டு உறுப்பினா்களுக்கு அக்டோபா் 29 முதல் நவம்பா் 24 ஆம் தேதி வரையில் அந்தந்த வட்டங்களில் நடைபெறும் பயிற்சியில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.