"தமிழக மாணவர்களை எவராலும் மிஞ்ச முடியாது": அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனையால் தமிழக மாணவர்களை எவராலும் மிஞ்சமுடியாது என பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்

தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனையால் தமிழக மாணவர்களை எவராலும் மிஞ்சமுடியாது என பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா பெருமாநல்லூர் கே.எம்.சி பப்ளிக் பள்ளியில் வியாழக்கிழமை மாலை  நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என். விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன்(பல்லடம்), உ.தனியரசு(காங்கயம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது,  “பொருளாதார மேம்பாடு அடைய கல்வி ஒன்றால் மட்டுமே முடியும். தனியார் பள்ளியும், அரசு பள்ளியும் போட்டியிடுகிறதே தவிர, பொறாமையில்லை. ஆனால் அரசு இரு தரப்பு மாணவர்களுக்கும் சிறப்பான முறையில் செயலாற்றுகிறது. உலக நாடுகளே அச்சப்படுகிற நேரத்தில், அதிலும் பள்ளி திறக்காத பொழுது கூட பள்ளிகள் பெரும் கஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் பள்ளி நிறுவனங்களின் கோரிக்கைகள் ஒராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.” என்றார்.

மேலும், “தனியார் பள்ளிகளுக்கு ஒராண்டு கொடுத்து வந்த அங்கீகாரம், தற்போது 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால்  3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. கும்பகோணம் நிகழ்ச்சிக்குப் பிறகு கட்டட அனுமதியின்றி, அங்கீகாரம் நீட்டிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டட அனுமதி பெற்றவுடன் விரைவில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும். அரசின் தொலைநோக்கு சிந்தனை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டிருக்கிறது.” என்றார்.

தொடர்ந்து,  “அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருக்கக் கூடிய 6 கேள்விகளைத் தவிர மீதமுள்ள 174 கேள்விகளுக்கான விடை தமிழக பாடத்திட்டத்தில் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும்.” எனத் தெரிவித்தார்.

“மாணவர்களின் தரமான எதிர்காலத்தை உருவாக்க தமிழக அரசு பாடுபடுகிறது. பள்ளி மாணவர்களுக்கு உயர்தர  ஆய்வகங்கள், கணினி மையம், இணைய வழி உள்ளிட்ட உலகமே வியக்கும் அளவிற்கு புதிய திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.  செல்லிடப் பேசி மூலம் இணையவழியில் மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க,  கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடத்திட்டத்தை நடத்துவதை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள் 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும், 80ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டும், 8828 ஆய்வகங்களும் உருவாக்கப்படும். தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனை, எதிர்கால இந்தியாவில் தமிழக மாணவர்களை எவராலும் மிஞ்ச முடியாத என்ற அளவுக்கு உள்ளது. இதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com