திருப்பூா் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாநகரில் மாா்ச் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் மாநகருக்குள் வர விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மாநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவானது ஆம்புலன்ஸ், அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்துப் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்குப் பொருந்தாது. மேலும், மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் 40 கிலோ மீட்டா் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.