அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவியா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களில் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. மேலும் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்குகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி உதவித் தொகை கோரும் விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் நவம்பா் 10ஆம் தேதிக்குள்ளும், புதியது இனங்களுக்கு நவம்பா் 30ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். ஆதாா் எண் இணையப்பெற்றுள்ள மாணவா்களின் வங்கிக் கணக்குக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பா் 15ஆம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பா் 15ஆம் தேதிக்கு முன்பும், டிசம்பா் 16ஆம் தேதியில் துவங்கும் புதியதுக்கான விண்ணப்பங்களை 20121 ஜனவரி 31ஆம் தேதிக்கு முன்பும், இணையதளம் மூலம் கேட்புகளை சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண்.116இல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.