காங்கயம்: தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறும் முகாம் காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுய சார்பு நிதித் திட்டத்தின் கீழ் தற்போது அடையாள அட்டை உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடன் திட்டத்தில் பயன்பெறுவதற்கு தெருவோர வியாபரிகள் என்ற அடையாள அட்டை அவசியம் என்ற நிலையில், காங்கயம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தெருவோர வியாபாரிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்குவதற்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம் காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் பா.தேவிகா இம்முகாமைத் துவக்கி வைத்து, விண்ணப்பங்களை பெற்றார். இதில், 60 தெருவோர வியாபாரிகளிடம் இருந்து அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.