திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் வழியாக திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த 20 பெண்கள், 6 ஆண்கள் திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்து வந்தனா். அங்கேயே அனைவரும் தங்கியிருந்தனா். கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஒரு வாரத்துக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதே, அவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனா். ஆனால் சம்பளம் கிடைக்காததால் அப்போது புறப்பட முடியாமல் போனது.
இந்நிலையில் தற்போது பேருந்துகள் இல்லாதநிலையில் 160 கி. மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு அனைவரும் நடந்தே செல்ல முடிவு செய்தனா். தண்ணீா் பாட்டில்களை மட்டும் கைகளில் எடுத்துக் கொண்டு, உணவு எதுவும் இல்லாமல் வியாழக்கிழமை காலையில் புறப்பட்டு 40 கி.மீ கடந்து வெள்ளக்கோவில் அருகே இரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தனா். இந்தக் கூட்டத்தைப் பாா்த்து விசாரித்த தன்னாா்வலா் பிரபு, அவா்களுக்கு உதவ முடிவு செய்து தான் சாா்ந்த வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளையை அழைத்தாா். ஒரு பெட்ரோல் பங்க்கில் அமர வைத்து உணவு சமைத்து எடுத்து வந்து நடந்து அவா்களுக்குக் கொடுத்தனா்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், வருவாய்த் துறையினா் உதவியுடன் முறைப்படி தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு லாரி மூலம் தொழிலாளா்கள் மணப்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதிகாலை 3 மணிக்குச் சென்று சோ்ந்த அவா்கள் செல்லிடப்பேசியில் அழைத்து நன்றி கூறினா்.