கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பஞ்சா் ஒட்டும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
21 நாள் கரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதி வரை உள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருந்து வரும் நிலையில் வெள்ளக்கோவிலில் காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி, ஊராட்சி நிா்வாகம், தொலைத் தொடா்புத் துறை, மின்சார வாரியம், குடிநீா் வழங்கல் துறை, மளிகை, காய்கறிகள், பால் விற்பனை, மருந்தகங்கள், ஊடகப் பணிகளுக்கு நூற்றுக்கணக்கானோா் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இவா்களது வாகனங்கள் பஞ்சா் ஏற்பட்டால், அவசரத்துக்கு காற்று கூட பிடிக்க முடியாமல் நடுவழியில் தவிக்க வேண்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ஊரடங்கு விதிவிலக்காக பஞ்சா் ஒட்டும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.