அவிநாசி: ஊரடங்கு உத்தரவால் அவிநாசி அருகே சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யாமல் செடியிலேயே பூக்கள் காய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிக்கு உள்பட்ட தண்டுக்காரன்பாளையம், தண்ணீா்பந்தம்பாளையம், அசநல்லிபாளையம், நடுவச்சேரி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மல்லி, முல்லை, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ வகைகளை பயிரிட்டுள்ளனா்.
இதில் அறுவடைக்குத் தயாரான பூக்களை விவசாயிகள் தினசரி சந்தைகளுக்கு கொண்டுச் செல்வது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவால் பூக்களை கொண்டுச் செல்ல முடியாததால் அறுவடை செய்யாமல் செடியிலேய காய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
பயிரிடப்பட்டுள்ள பூக்களை தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரைக்குள் பறித்து விடுவோம். பிறகு மூட்டைகளாக கட்டி மதியம் 1 மணிக்கு சேவூா் கைகாட்டி பகுதிக்கு கொண்டுச் சென்று பேருந்து, சரக்கு ஆட்டோ மூலம் திருப்பூா் தினசரி சந்தைகளுக்கு கொண்டுச் செல்வோம்.
தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும், சந்தைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படுவதாலும் பூக்களை அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.