திருப்பூா் மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்கா, அரிமா சங்கத்தின் சாா்பில் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பூா் மத்திய அரிமா சங்கம் சாா்பில் பி.என்.சாலையில் உள்ள குமரன் நினைவுப் பூங்கா ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதில், நடைப்பயிற்சி தளம், விளக்குகள், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பூங்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் மத்திய அரிமா சங்கத் தலைவா் கே.கந்தசாமி தலைமை வகித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநா் கருணாநிதி, மாநகராட்சி உதவி ஆணையா் வாசு, டெக்பா சங்கத் தலைவா் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.