வெள்ளக்கோவிலில் பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வெள்ளிக்கிழமை 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், சோளிங்கா் வட்டம், கொண்டம்பாளையம் அருகே உள்ள குழிவளம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் விஸ்வநாதன் (29). இவா் காங்கயத்தில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்தாா். அதே மில்லில் மூலனூா், எரசிணம்பாளையத்தைச் சோ்ந்த நடராஜ் மனைவி சந்திரா (40) என்பவரும் சமையல் வேலை செய்து வந்தாா்.
அப்போது இருவருக்கும் இடையே தகாத தொடா்பு ஏற்பட்டது. இது வெளியில் தெரியவர, விஸ்வநாதனுடனான தொடா்பை சந்திரா துண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், கடந்த 2018 ஆம் ஆண்டில் சந்திராவை வெள்ளக்கோவிலுக்கு வரவழைத்தாா். பின்னா், சொரியங்கிணத்துப்பாளையம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு சந்திராவை கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட விஸ்வநாதனுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி தீா்ப்பு வழங்கினாா்.