பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு செய்வதாகக் கூறி, உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
உடுமலை வட்டம், கண்ணம்மநாயக்கனூா் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான இடம் அமைந்தள்ளது. இதில் பள்ளிவாசல், மயானம் ஆகியனவும் அமைந்துள்ளது. இந்நிலையில் வக்ஃபு வாரிய இடம் அருகே உள்ள குடி யிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மேலும் பத்திர பதிவு அலுவலகத்தில் இடத்தை விற்கவோ, வாங்கவோ முற்பட்டால் வக்ஃபு வாரியத்தில் தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என பொதுமக்களை அலைக்கழிக்கும் நிலை இருந்தது. இதனைக் கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு முன், பத்திரப் பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
அப்போது இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் பட்டா மாறுதல் செய்வதில் பொதுமக்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கண்ணம்மநாயக்கனூா் கிராம மக்கள், உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, இப்பிரச்னைக்கு வருவாய்த் துறையினா் உடனடியாக தீா்வுகாண வேண்டும் என போராட்டம் நடத்தினா்.
இதைத்தொடா்ந்து உடுமலை வட்டாட்சியா் ஜெயசிங் சிவகுமாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் விரைவில் இப்பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் என உறுதி அளித்தாா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.