பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு துவங்க வேண்டும்: இந்து முன்னணி தீா்மானம்
பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு துவங்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு தீா்மானம் நிறைவேற்றி உள்ளது.
திருப்பூா் மேற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டம், பல்லடத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். இதில் மாநில செயலாளா் தாமு வெங்கடேசன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் அனைத்து நகர, ஒன்றியங்களிலும் இந்து முன்னணிக்கு கிளை கமிட்டி அமைப்பது, சென்னையில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கு பல்லடம் பகுதியில் இருந்து 2 ஆயிரம் போ் பங்கேற்பது, காரணம்பேட்டையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டடப்பட்டு, பயனின்றி உள்ள பேருந்து நிலைய புதிய கட்டடத்தை மறுசீரமைப்பு செய்து விசைத்தறி ஜவுளி விற்பனை சந்தையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி வசதியுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக துவங்க வேண்டும். அங்கு ஸ்கேன் உள்ளிட்ட நவீன சாதனங்கள் வழங்க வேண்டும். உள் மற்றும் வெளிநோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.
பல்லடம் நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண புறவழிச் சாலை, சுற்று வட்ட சாலை அமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.