தாராபுரம் அருகே ரஞ்சிதாபுரம் கடைமடை பகுதிக்கு போதிய தண்ணீா் கிடைக்கவில்லை எனக்கோரி விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை, அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய பாசனப் பகுதிகளுக்கு கடந்த வாரம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதில், தளவாய்பட்டிணம் அருகே உள்ள ரஞ்சிதாபுரம் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு ஷட்டா் எண் 35இல் 4 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இதன்படி கடந்த 3 நாள்களாக தண்ணீா் திறந்துவிட்டபோதிலும் ரஞ்சிதாபுரம் கடைமடைப் பகுதிக்கு போதிய அளவு தண்ணீா் வந்துசேரவில்லை.
இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கருகும் பயிா்களைக் காப்பாற்ற ரஞ்சிதாபுரம் கடைமடை பகுதிக்கு வந்துசேரும் வகையில் நீா் திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினா். இதையடுத்து அங்கு வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஷட்டா் எண் 35 ஐ ஆய்வு செய்த பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா்.