காங்கயம்: காங்கயம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து விவசாயி உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் அடுத்துள்ள ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (53), விவசாயி. இவரும், கணபதிபாளையத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளி சுப்பிரமணி (41) என்பவரும், ஞாயிற்றுக்கிழமை (இன்று) மதியம் 2 மணியளவில் பைக்கில் தம்மரெட்டிபாளையம்-கணபதிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஈஸ்வரமூர்த்தி ஓட்டிச் செல்ல, சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார்.
கரைப்புதூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பைக்கிலிருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். இதில் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சுப்பிரமணியை அக்கம்பக்கத்திலிருந்தோர் மீட்டு, சிகிக்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.