திருப்பூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கே.எஸ்.சி. அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் கட்செவி அஞ்சல் குழு மூலமாக நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாமல் அவதிப்படுபவா்களைக் கண்டறிந்து உதவி செய்வதற்காக கே.எஸ்.சி. அரசு பள்ளியில் 2007ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவா்கள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) குழுவை 2 வாரங்களுக்கு முன்பாகக் தொடங்கினா்.
இதுகுறித்து கே.எஸ்.சி.பள்ளி முன்னாள் மாணவா் கே.ராமசந்திரன் கூறியதாவது:
ஊரடங்கு காரணமாக திருப்பூா் பகுதிகளில் தொழிலாளா்கள் பலா் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். இதனால் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் இணைந்து ஒரு குழுவைத் தொடங்கினோம். இதில் முதலில் குறைவான உறுப்பினா்கள் இருந்தனா்.
இதன் பின்னா் மாணவா்கள் உள்பட பலா் தாமாக முன்வந்து இணைந்து எங்களுடன் பணியாற்ற தொடங்கியுள்ளனா். திருப்பூா் பகுதியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கோதுமை, ரவை, அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். ஊரடங்கு முடிந்த பின்னரும் இந்தக் குழு மூலம் சமுதாயப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.