காங்கயம்: காங்கயம் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே, சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமை வகித்து, உரையாற்றினார். இதில் அவர் பேசியபோது, சாலை பாதுகாப்பு, ஆன்லைன் வகுப்புகளுக்காக தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் மாணவ, மாணவிகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா பேசியபோது, பெண் குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் காங்கயம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன், போலீசார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காங்கயம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.